அர்த்தநாரீஸ்வரர் கல்யாண உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அர்த்தநாரீஸ்வரர் கல்யாண உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 31, 2026 02:58 AM

திருச்செங்கோடு:திருச்செங்கோடு வைகாசி விசாக தேர்திருவிழாவை முன்னிட்டு, அர்த்தநாரீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருச்செங்கோட்டில், வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரர், நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைகாசி விசாக தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடக்கும். இதன்படி, 9ம் நாள் நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கைலாசநாதர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் வள்ளி தேவ சமேத செங்கோட்டுவேலவர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.
திருத்தேரில் கல்யாண உற்சவ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு வேண்டுதலாக, கல்யாண சீர் கொடுக்க பக்தர்கள் தேர் மேல் ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்வர். கடந்த சில ஆண்டுகளாக பழைய தேர் என்பதால், பக்தர்கள் தேர் மேல் ஏறிச்சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. தற்போது புதிய தேரில், அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்திற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் தரிசனம் செய்ய வருபவர்களிடம், வசூல் செய்ய பெரிய தேர் உண்டியல் என நடமாடும் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துசமய அறநிலையத்துறை உண்டியல் என்ற பெயர் இல்லை. அதிகாரிகளின் சீல் இல்லை.
இது குறித்து, திருச்செங்கோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சின்னதுரையிடம் கேட்ட போது, ' உண்டியல் பற்றி எனக்கு தெரியவில்லை. தகவலுக்கு நன்றி, நான் விசாரிக்கிறேன்,' என்றார்.
