ADDED : ஏப் 06, 2025 01:11 AM
நில உடைமை விபரம் பதிய அவகாசம்
நாமக்கல்:'நில உடைமை விபரங்களை பதிவு செய்வதற்கு, வரும், 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழக வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி, சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடந்து வருகிறது. மேலும், விவசாயிகள் பொது சேவை மையம் சென்று அங்கும் நில உடைமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின், அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். 2025-26ம் நிதியாண்டிற்கான முதல் தவணை தொகை, நில உடைமை விபரங்கள் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே, பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்ட நிதி விடுவிக்கப்பட உள்ளதால், தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
நாமக்கல் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 16,181 விவசாயிகளில், தற்போது, 66,417 விவசயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள், தங்களது கிராமங்களில் வேளாண் - உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார், மொபைல் எண் ஆகிய விபரங்களை அளித்து, எவ்வித கட்டணமும் இன்றி, கடந்த, 31க்குள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, வரும், 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் போன்ற மத்திய, மாநில அரசு திட்டத்தில் விவசாயிகள் எளிதில் பயன்பெற, தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகிறது. அதனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்களது நில உடைமை விபரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.