அமாவாசையில் கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
அமாவாசையில் கொல்லிமலைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 15, 2026 04:43 AM

சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
அமாவாசை தினமான, நேற்று கொல்லிமலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தற்போது, அங்கு கோடைமழை பெய்யாத காரணத்தால், நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து இன்றி காணப்படுகிறது. இதனால் அந்த அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் அருகே, 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், சிறிதளவு நீர்வரத்து உள்ளது. அந்த அருவிக்கு வரும் நீரோட்டப்பாதையில் உள்ள ஊற்றில் ஊற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டிவருகிறது. இதனால் அந்த அருவியை கண்டு ரசித்தும், குளித்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.அதேபோல், 'அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் பாக்கெட்டுகள், பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மற்ற சுற்றுலா பயணிகள் அங்கு தவறி விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என, கொல்லிமலை வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
