ADDED : மார் 10, 2025 02:19 AM
புதிய தேர் வெள்ளோட்டம்
நாமக்கல்:நாமக்கல், நல்லிபாளையத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா கோலாகலமாக நடக்கும். அங்கு, 100 ஆண்டுக்கு மேல் பழமையான தேர் ஒன்று இருந்தது.
அதற்கு பதில் புதிய தேர் அமைக்க முடிவு செய்தனர். 2024 செப்., மாதம் நன்கொடை மூலம் பெறப்பட்ட, எட்டு லட்சம் ரூபாயை ஒதுக்கி, தேர் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், நேற்று தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது.
காலை, 7:30 மணிக்கு, மாரியம்மன் கோவிலில் இருந்து சிறப்பு பூஜையுடன் துவங்கி, ரெட்டியார் தெரு, நடுவீதி, மேற்கு வீதி, கிழக்கு வீதி மற்றும் மெயின் ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வரும் வைகாசி மாதம் நடக்கும் திருவிழாவின் போது உற்சவ அம்மன் சிலையை தேரில் ஏற்றி,
திருவீதி உலா வரவுள்ளது.