/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கேட்டரிங் மாணவி மர்ம மரணம் உறவினர்கள் சாலை மறியல்
/
கேட்டரிங் மாணவி மர்ம மரணம் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஆக 15, 2024 01:27 AM

நாமக்கல்:நாமக்கல் அடுத்த களங்காணியைச் சேர்ந்த சரவணன், ரேவதி தம்பதியின் மகள் கோபிகா, 17. இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இந்த கல்லுாரியில், ஹோட்டல் மேலாண் மற்றும் கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் படிக்கும் மாணவ - மாணவியர், பயிற்சிக்காக பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, கோபிகா மற்றும் சக மாணவியர், பயிற்சிக்காக கொல்லி மலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு பயிற்சி பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, குளியலறையில் மயங்கி விழுந்து, அவர் இறந்து விட்டதாக, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, உறவினர்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மதியம், 1:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நல்லிபாளையம் போலீசார், நேர்மையாக விசாரணை நடத்தப்படும் என உறுதி செய்ததையடுத்து, மாலை, 4:45 மணிக்கு, கோபிகாவின் உடலை பெற்றுச் சென்றனர்.