ADDED : ஆக 05, 2024 02:08 AM
ப.வேலுார், ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 500 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், நேற்று ஆடி அமாவாசை என்பதால், பெரும்பாலான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியதால், அசைவ உணவு வீடுகளில் சமைக்கவில்லை. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்த விவசாயிகள், ஏமாற்றத்துடன் திரும்ப கோழிகளை கொண்டு சென்றனர்.