/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாக்., அகதிகளாக வந்த 300 ஹிந்துக்களுக்கு குடியுரிமை புதிய சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கியது
/
பாக்., அகதிகளாக வந்த 300 ஹிந்துக்களுக்கு குடியுரிமை புதிய சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கியது
பாக்., அகதிகளாக வந்த 300 ஹிந்துக்களுக்கு குடியுரிமை புதிய சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கியது
பாக்., அகதிகளாக வந்த 300 ஹிந்துக்களுக்கு குடியுரிமை புதிய சட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கியது
ADDED : மே 16, 2024 03:58 AM
புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த 300க்கு மேற்பட்ட ஹிந்துக்களுக்கு நேற்று இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி அகதிகளாக நம் நாட்டுக்கு வந்துள்ள ஆறு சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்த சட்டத்தை, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு நடுவில் மோடி அரசு 2019ல் நிறைவேற்றியது.
இந்த நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர், பவுத்தர், சமணர், பார்சி மதத்தினருக்கு இந்தியா உரிமை வழங்கும். முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மூன்றுமே இஸ்லாமிய நாடுகள் என்பதால் அங்கே முஸ்லிம்களுக்கு துன்புறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை என மத்திய அரசு சொன்னது.
எனினும், உடனடியாக சட்டம் அமலுக்கு வரவில்லை. தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு சில நாட்கள் முன்னதாக, சட்டத்துக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன. சட்டமும் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, 2014 டிசம்பருக்கு முன் அகதியாக வந்தவர்களுக்கு குடியுரிமை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பதும் ஒரு விதி. அது, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை 25 ஆயிரத்துக்கு மேலானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். மூன்று நிலைகளில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.
முதலில் மாவட்ட குழு பரிசீலனை. தபால் துறை கண்காணிப்பாளர் பதவிக்கு நிகரான ஒரு அதிகாரி தலைமையில் தகவல்களை குழு சரிபார்த்து, மாநில குழுவுக்கு பரிந்துரைக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் இயக்குனர் அதன் தலைவர். அது ஆய்வு செய்து தேசிய குழுவுக்கு அனுப்பும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு குடியுரிமை வழங்க உத்தரவு பிறப்பிக்கும்.
இந்த வகையில், முதல் கட்டமாக 300 பேருக்கு நேற்று, இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. இவர்கள் எந்த நாட்டவர் என்பதை அரசு தெரிவிக்கவில்லை. பெரும்பாலானோர் பாகிஸ்தானில் இருந்து இங்கு வந்த ஹிந்துக்கள் என்று
தெரிகிறது.
டில்லியில் நடந்த எளிய நிகழ்ச்சியில், இவர்களில் 14 பேருக்கு உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா குடியுரிமை சான்றிதழை வழங்கினார். ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பின் இயக்குனர் தபன் குமார் தேகா, இந்திய பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.