/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடால் பஸ் உரிமையாளருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடால் பஸ் உரிமையாளருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடால் பஸ் உரிமையாளருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு
இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடால் பஸ் உரிமையாளருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு
ADDED : ஜன 24, 2024 12:15 PM
நாமக்கல் : 'தீ விபத்தில் சேதமடைந்த பஸ் உரிமையாளருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம், 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல்லை சேர்ந்தவர் செந்தில்குமார், 56; ஆம்னி பஸ் உரிமையாளர்.
இவருக்கு சொந்தமான பஸ்சை, மத்திய அரசின் பொது இன்சூரன்ஸ் நிறுவனமான, 'நேஷனல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்திருந்தார். கொரோனா ஊரடங்கு காலமான, 2020 ஆக.,ல் அந்த பஸ் சென்னை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது.தீ விபத்தில் சேதமடைந்த பஸ்சிற்கு, இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை, 10 லட்சம் ரூபாய் வழங்குமாறு செந்தில்குமார், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் மனு கொடுத்துள்ளார். தீ விபத்திற்கு முன்னரே, பஸ் பர்மிட் காலாவதியாகிவிட்டது போன்ற காரணங்களை கூறி, இன்சூரன்ஸ் தொகை முழுவதையும் தர மறுத்து, பாதி தொகையை தர ஒப்புக்கொண்டது.அதனால் பாதிப்படைந்த பஸ் உரிமையாளர் செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர்.அதில், கொரோனா காலத்தில் பஸ் பர்மிட் போன்றவற்றை வாங்குவதற்கு இயலாத சூழ்நிலை இருந்ததால், விதிவிலக்கு அளித்து, மத்திய அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தீ விபத்தில் சேதமடைந்த பஸ்சிற்கு முழு இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுப்பது, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு.அதனால், இன்சூரன்ஸ் நிறுவனம், பஸ் உரிமையாளருக்கு, நான்கு வாரத்தில், முழு இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை, 10 லட்சம் ரூபாய் மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய் என, மொத்தம், 11 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தவறினால், 2020 ஆக., முதல், பணம் வழங்கப்படும் நாள் வரை, ஆண்டுக்கு, 9 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

