/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 29 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 29 டன் காய்கறி விற்பனை
ADDED : ஜன 08, 2024 11:51 AM
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 29 டன் காய்கறிகள், 10.16 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது, மார்கழி, சபரிமலை சீசன் மற்றும் புத்தாண்டு, பொங்கல் விழாக்காலம் என்பதால், பலரும் சைவத்திற்கு மாறி உள்ளனர். அதனால், வழக்கத்தை விட, நேற்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 183 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 25,485 கிலோ காய்கறிகள், 3,880 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள் என, மொத்தம், 29,400 கிலோ எடையுள்ள விளைபொருட்கள், விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, 5,880 நுகர்வோர் வாங்கி சென்றனர். அதன் மூலம், 10 லட்சத்து, 16,090 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 30 ரூபாய், கத்தரி, 36, வெண்டை, 48, சின்ன வெங்காயம், 35, பெரிய வெங்காயம், 34 ரூபாய்க்கு விற்பனையானது.