ADDED : ஏப் 24, 2025 01:58 AM
நாமக்கல்:
உலக புத்தக தினவிழாவை சிறப்பிக்கும் வகையில், நாமக்கல் போட்டித்தேர்வு நுாலக வளாகத்தில், புத்தக விழா, நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட நுாலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் அமல்ராஜ் வரவேற்றார். தமிழாசிரியர் செல்வ செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார், மாவட்டம் முழுவதும் நுாலகங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் அறிவார்ந்த சமுதாயம் உருவாக பாடுபடும் நுாலக அலுவலகர்களை பாராட்டினார்.
நாமக்கல் கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி, ''நான் தொழில் அதிபராக உருவானதற்கு அடிப்படை காரணம் நுால்களே. சிறு வயதில் சென்னை மயிலாப்பூர் நுாலகத்தில், நுாலகருக்கு உதவியாக இருந்து பல நுால்களை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
நுால்கள் வாசிப்பே எனது வாழ்வில் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு காரணம்,'' என்றார். தொடர்ந்து, போட்டித்தேர்வு நுாலக வளர்ச்சி பணி, நிழற்கூடம், புத்தகங்கள் வாங்க, ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக உறுதி அளித்தார்.
விழாவில், வளையப்பட்டி அரசு பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழ்ச்செல்வன், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் வீரராகவன் ஆகியோர் எழுதிய புத்தகங்களுக்காக, கவுரவிக்கப்பட்டனர். கவிஞர் சிந்தனை பேரவை நிர்வாகி அன்புச்செல்வன், மைய நுாலக புரவலர் முகமதுரபி உள்பட பலர்
பங்கேற்றனர்.

