ப.வேலுார், ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதுார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது.
வியாபாரிகள் வாங்கிச்சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம், மரவள்ளி கிழங்கு டன், 5,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 500 ரூபாய் உயர்ந்து, 5,500 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த வாரம், சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்க, 6,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது, டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்ந்து, 7,000 ரூபாய்க்கு விற்கிறது.

