ADDED : மே 27, 2026 04:16 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், வரும், ஜூலை, 17ல் துவங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 3,540 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 4,012 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்தியாவில், முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1,872ல் நடத்தப்பட்டது. தற்போது, நாட்டின், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்கு பின், 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும் நடக்க உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலம், தங்கள் விபரங்களை தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு வரும், ஜூலை, 17 முதல், 31 வரை நடக்கிறது.
மேலும், கணக்கெடுப்பாளர் மூலம், வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள், வரும் ஆக., 1 முதல், 30 வரை நடக்கிறது. மாவட்டத்தின் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக, கலெக்டர் உள்ளார். மாநகராட்சி பகுதிக்கு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக, மாநகராட்சி கமிஷனர், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில், பொறுப்பு அலுவலர்களாக, 8 தாசில்தார்கள், 4 நகராட்சி கமிஷனர்கள், 19 டவுன் பஞ்., செயலாளர்களும் செயல்பட உள்ளனர்.மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில், 3,068 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள், வீடுகள்தோறும் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027'-க்கான பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். இப்பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கி, இன்று முதல் வரும், 29 வரை, மூன்று நாட்கள் நடக்கிறது.
சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக உதவி இயக்குனர் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. 'பயிற்சியில் பங்கேற்றுள்ள அனைத்து அலுவலர்களும், நல்ல முறையில் பயிற்சி எடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்' என, கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவுறுத்தினார்.
சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் பிஜி, டி.ஆர்.ஓ., சரவணன், ஆர்.டி.ஓ., சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
