/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவக்கம்
/
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவக்கம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவக்கம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தேர் திருவிழா துவக்கம்
ADDED : மே 15, 2024 11:07 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக தேர் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செங்கோட்டின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்று, வைகாசி விசாக தேர் திருவிழா. இந்த திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரர் சுவாமி, நகருக்கு எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும், வைகாசி விசாகத் தேர் திருவிழா, 14 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
முதல் நாளான நேற்று, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டுவேலவர் சந்நதிக்கு எதிரில் அமைந்துள்ள, 36 கணுக்களை உடைய கொடிமரத்தில், பாரம்பரிய முறைப்படி செங்குந்தர் எழுகரை நாடு நெசவாளர்கள் கொடுத்த துணியை கொண்டு கொடி அமைக்கப்பட்டிருந்தது.
கொடிசீலையின் ஒரு முனையில், அந்த தெய்வத்தின் வாகன வரைபடம் பதித்து இருக்கும். அந்த முனையில் மாவிலை கூர்ச்சம் வைத்துகட்டி பூஜைகள் செய்து தர்பை கயிறு, கொடிதுணி, என்ற மூன்றும் ஒன்றாக சேர்த்து கொடிமரத்தில் ஏற்றி சுற்றி கட்டுவார்கள்.
முன்னதாக, 'துவஜாரோகணம்' என்ற சிறப்பு பூஜைகள் அர்த்தநாரீஸ்வரருக்கு நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க கலச பூசைகள் செய்த சிவாச்சாரியர்கள், கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினர். அதையடுத்து, அர்த்தநாரீஸ்வரர் சந்நிதானம் முன் உள்ள கொடி மரத்திலும் கொடியேற்றப்பட்டது. திருச்செங்கோடு அர்த்நாரீஸ்வரர் கோவில் இணை ஆணையர் ரமணிகாந்தன், அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அர்ஜீனன், அருணா சங்கர், உள்பட பலர் பங்கேற்றனர்.
வரும், 17ல், உற்சவர் சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 22ல், சுவாமி திருத்தேருக்கு எழுந்தருள், திருத்தேர் வடம் பிடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 27ல், அர்த்தநாரீஸ்வரர் பரிவார தெய்வங்களுடன் திருமலை சந்நிதானத்திற்கு எழுந்தருளுகிறார். விழாவை முன்னிட்டு, கண்ணகி விழா, கம்பன் விழா, சேக்கிழார் விழா, வள்ளலார் விழா நடக்கிறது. மேலும், பல்வேறு தலைப்புகளில் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், வழக்காடு மன்றங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

