/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா
/
நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா
நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா
நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா
ADDED : மே 09, 2024 06:40 AM
நாமக்கல் : பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஒப்பந்த பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணி, பாதுகாப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 'கிரிஸ்டல்' என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணிகள், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு, செவிலியர், மருத்துவர்களுக்கு உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது.அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என, 225 பேர் சுழற்சி முறையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத சம்பளம், 17,280 ரூபாய் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒப்பந்த நிறுவனம், 14,000 ரூபாய் மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், முழு சம்பளம் வழங்க வேண்டும். பெண்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது. தாங்கள், 8 மணி நேரத்திற்கு மேலாக கூடுதலாக, 13 மணி நேரம் வரை பணி செய்து வருவதாகவும், அதற்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., பணத்தை தங்களது கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாசில்தார் சீனிவாசன், கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, கிரிஸ்டல் நிறுவன மேலாளர் அக்னீஷ் ஆகியோர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணி, பாதுகாப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.