/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டீஸல் திருட்டு கண்டறிய உதவும் கருவி
/
டீஸல் திருட்டு கண்டறிய உதவும் கருவி
ADDED : செப் 13, 2011 02:01 AM
நாமக்கல்: லாரி உள்ளிட்ட சரக்கு வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும்
வாகனங்களில் டீஸல் திருட்டு கண்டறியும் 'ஃப்பூயல் ஸ்கேனர்' கருவியை,
தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அளவில், லாரித்
தொழிலில், நாமக்கல் நீங்கா இடம் பிடித்துள்ளது. நாமக்கல்லில் மட்டும், 25
ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் உள்ளன. அவை, நாடு முழுவதும் பல்வேறு
மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. லாபகரமான தொழிலாக இருந்தபோதிலும்,
பல்வேறு இடர்பாடுகளை லாரி உரிமையாளர்கள் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக,
வெளிமாநிலங்களில் சரக்கு லாரி கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது
அரங்கேறி வருவதாக, லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுசம்மந்தமாக
போலீஸில் வழக்கு பதிவு செய்த போதிலும், இழப்பை ஈடு செய்ய
இயலாதாகிவிடுகிறது. லாரி உரிமையாளர்களது பிரச்னைகளுக்கு தீர்வாக,
திருச்சியை சேர்ந்த டி.எஸ்.எம்., என்ற நிறுவனம், 'ஃப்பூயல் சென்சார்' எனும்
கருவியை உருவாக்கியுள்ளது. அந்தக் கருவியை லாரியின் டீஸல் டேங்கில்
பொருத்தி, அதில் டீஸல் டேங்கின் கொள்ளவை பதிவு செய்தால், அதன் அளவு குறைவதை
ஆன்லைன் மூலம் மொபைல் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் காண இயலும். அதுபோல்,
அந்தக் கருவியில் சிம் கார்டு ஒன்றை பொருத்தினால், அதில் உள்ள ஜி.பி.எஸ்.,
மூலம் (குளோபல் பொசிஷன் ஸ்கேனிங்) வண்டி எங்கு செல்கிறது என்ற
விவரத்தையும், ஆன் லைனில் கம்ப்யூட்டரில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்
என, அந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, டி.எஸ்.எம்., நிறுவன
மேலாளர் சங்கர் தெரிவித்ததாவது:
'ஃப்யூயல் ஸ்கேனர்' கருவி முதல் முறையாக தமிழகத்தில்
அறிமுகப்படுத்பட்டுள்ளது. இந்த கருவி, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடையதாகும்.
அந்தக் கருவியை டீஸல் டேங்கில் பொருத்தினால், அதில் உள்ள எரிபொருள் அளவு
குறைவதை, எந்நேரமும், ஆன்லைன் மூலம் அதன் அளவு குறைவதைக் காண முடியும்.
அதன்மூலம் எரிபொருள் திருடுவது தடுக்க முடியும். அந்தக் கருவியில்
ஜி.பி.எஸ்., கார்டு பொருத்தினால், லாரி எங்கு செல்கிறது என்ற விவரத்தை ஆன்
லைன் மூலம் கம்ப்யூட்டரில் அறிய முடியும். இந்தக் கருவி, 8,500 ரூபாய்
மதிப்புடையதாகும். மற்ற மாநிலங்களில் இந்தக் கருவி உள்ளது. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.