/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.6 லட்சம் காப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவு
/
ரூ.6 லட்சம் காப்பீடு வழங்க நிறுவனத்திற்கு உத்தரவு
ADDED : ஜன 10, 2024 12:40 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சேர்ந்தவர் குமார், 56; லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இவர், 2020 அக்டோபரில், இரு சக்கர வாகனம் ஓட்டிய போது, விபத்தில் சிக்கி இறந்தார்.
அவர் உறுப்பினராக இருந்த, நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், உறுப்பினர்கள் அனைவருக்கும், 'நியூ இந்தியாஅஷ்யூரன்ஸ்' நிறுவனத்தில், குரூப் இன்சூரன்ஸ் எடுத்திருந்தது.
அதன்படி, விபத்தில் இறந்த குமாரின் மனைவி தேவகி, மகன் மற்றும் மகளுக்குஇன்சூரன்ஸ் தொகை, 10 லட்சம் ரூபாயை வழங்கும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மூவரும் மனு தாக்கல் செய்தனர்.
'விபத்தில் இறந்த குமாருக்கு, கனரக வாகனம் ஓட்டுவதற்கு மட்டுமே லைசென்ஸ் உள்ளது. இருசக்கர வாகனத்தை லைசென்ஸ் இல்லாமல் ஓட்டியதால், இன்சூரன்ஸ் தொகையை கொடுக்க முடியாது' என, அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், குமார்குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
'லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கிய குரூப் இன்சூரன்ஸ் பாலிசியில், 'உறுப்பினர் சட்டத்தை மீறி செயல்பட்டு இறப்பு ஏற்பட்டால், காப்பீட்டு தொகை வழங்கப்பட மாட்டாது' என, நிபந்தனை உள்ளது' என, நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிட்டது.
விசாரணை முடிந்து நேற்று, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
அதில், 'இறந்தவரின் வாரிசுகளுக்கு, 5 லட்சம் ரூபாயும், நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

