ADDED : ஆக 10, 2025 12:50 AM
ப.வேலுார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் நடேசன், 80; இவர், நேற்று முன்தினம், ப.வேலுாரில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக மகன் செந்திலிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இரவு வரை தந்தை வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது மகன் செந்தில், வேலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு போன் செய்து, 'தந்தை வந்தாரா' என கேட்டுள்ளார். அவர்கள், 'வரவில்லை' என, தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் நடேசனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், பரமத்தி அருகே, ஓவியம் பாளையம், திருமணிமுத்தாறு பாலம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ளதாக செந்திலுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று செந்தில் பார்த்தபோது, அவரது தந்தை நடேசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, செந்தில், பரமத்தி போலீசில் அளித்த புகார்படி, நடேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.