/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போலி ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி
/
போலி ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஆக 08, 2025 01:42 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, பெரியமணலி அடுத்துள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்,29. இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நாமக்கல், ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்த்தினி,29, என்பவருக்கும், கடந்த ஆண்டு ஜூன், 12ம் தேதி திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது தன்வர்த்தினி, பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக அவரது பெற்றோர் கூறினர். ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களில் அவர் பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நவீன்குமார் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த, 26ம் தேதி தன்வர்த்தினியை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி தன்வர்த்தினி வக்கீல்கள் மூலம் நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. அவர், மீண்டும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். மாவட்ட தலைமை நீதிபதி குருமூர்த்தி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து
உத்தரவிட்டார்.