/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அளவீடு சான்று வழங்காததால் விவசாயிகள் ஆவேசம்
/
அளவீடு சான்று வழங்காததால் விவசாயிகள் ஆவேசம்
ADDED : பிப் 01, 2024 11:17 AM
திருச்செங்கோடு: அளவீடு சான்றிதழ் வழங்காததை கண்டித்து, திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை எளையாம்பாளையம் பகுதியில், கல்குவாரி கிரசர்கள் இயங்கி வருகின்றன. சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வருகிறது என, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 'வீடுகளுக்கும், குவாரிகளுக்கும் இடையேயான இடைவெளி குறித்தான அளவீடுகள் செய்து தர வேண்டும்' என, கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, அளவீடு செய்யப்பட்டது. ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும், அளவீடு செய்ததற்கான சான்றுகள் வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். தினசரி அலுவலகம் வந்து செல்லும் நிலையில், பலன் இல்லாமல் இருந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், காத்திருந்தும் சான்று வழங்கவில்லை.
இதனால், ஆவேசம் அடைந்தவர்கள், போராட்டக்குழு தலைவர் பழனிவேல் தலைமையில், இரவு, 9:30 மணிக்கு, தாலுகா அலுவலகத்தில், தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.