/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
கொப்பரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 04, 2025 01:42 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில், கொப்பரை தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை அடிவார பகுதியான வாழவந்தி கோம்பை, நடுக்கோம்பை, பொம்ம சமுத்திரம், பெரியபள்ளம்பாறை, சின்னபள்ளம்பாறை, காளப்ப நாயக்கன்பட்டி, வெண்டாங்கி மற்றும் பேளுக்குறிச்சி உள்ளிட்ட
பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். கொல்லிமலை அடிவாரப் பகுதி என்பதால் மிதமான தட்பவெப்ப நிலையே நிலவுகிறது. இதன் காரணமாக விளையும் தேங்காய்களின் பருப்பு அடர்த்தியாக இருக்கும்.
மேலும் எண்ணெய் பசை அதிகளவில் உள்ளதால், வெளி மார்க்கெட்டுகளில் நல்ல வரவேற்பும் இதற்கு உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள, தென்னந்தோப்புகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து, கொப்பரைகளை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். விவசாயிகள் சிலர் தாங்களே கூலி ஆட்களை வைத்து, தேங்காய்களை பறித்து அதனை வெட்டி உலர் களத்தில் காய வைத்து, பருப்புகளை தனியாக பிரித்து எடுத்து நேரடியாக சந்தைகளிலும், மார்க்கெட்டுகளிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கொப்பரை விலை உயர்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ கொப்பரை, ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது ஒரு கிலோ, 250 முதல், 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.