/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகன டிரைவிங் பயிற்சி
/
அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகன டிரைவிங் பயிற்சி
ADDED : ஆக 21, 2025 02:12 AM
நாமக்கல்,
நாமக்கல் அடுத்த கீரம்பூர் அருகில் உள்ள தனியார் டிரைவிங் பயிற்சி மையத்தில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், தமிழக அரசின், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், கனரக வாகனங்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், தமிழக திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, நாமக்கல்லில் உள்ள தனியார் டிரைவிங் பயிற்சி மையத்தில், 37 நாட்கள் கொண்ட இலவச கனரக வாகன டிரைவிங் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு லைட் மற்றும் ஹெவி மோட்டார் வாகன டிரைவிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பின், தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சியின் முடிவில் அரசு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும். மேலும், பின்தங்கிய சமூகத்தினருக்கு, 6,000 முதல் 12,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.டி.ஓ.,க்கள் பதுவைநாதன் (வடக்கு), முருகேசன் (தெற்கு), திறன் பயிற்சி உதவி இயக்குனர் பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
]