/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
250 பேருக்கு தலா நான்கு கிராம் தங்கம் வழங்கல்
/
250 பேருக்கு தலா நான்கு கிராம் தங்கம் வழங்கல்
ADDED : செப் 19, 2011 12:43 AM
நாமக்கல்: ''நாமக்கல் மாவட்டத்தில், 250 பேருக்கு தலா நான்கு கிராம் தங்கம் வீதம், ஒரு கிலோ தங்கம், திருமாங்கல்யத்துக்காக வழங்கப்பட்டுள்ளது,'' என, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.விழாவுக்கு கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பாஸ்கர், டி.ஆர்.ஓ., சீதாலட்சுமி, முன்னாள் எம்.பி., சரோஜா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பாரிவேல், சமூக நல அலுவலர் சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:பெண்கள் புகுந்த வீட்டுக்கு தங்கம் இல்லாமல் செல்லக்கூடாது எனக்கருதிய, தமிழக முதல்வர், ஏழைப் பெண்களின் திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்காக நான்கு கிராம் தங்கம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தற்போது நாமக்கல் மாவட்டத்தில், 250 பேருக்கு, தலா நான்கு கிராம் வீதம் ஒரு கிலோ தங்கம் வழங்கப்படுகிறது.
பட்டம் மற்றும் பட்டயப்படித்தவர்களுக்கு, திருமண நிதி உதவியாக, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. ஏழை மக்களின் வாழ்வு வளம்பெற, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றவர்களுக்கு சுமை இருக்கக் கூடாது என்பதற்காக பள்ளி மாணவ, மாணவியருக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.இலவசம் என்றால், அதை வாங்குவோரிடம் தாழ்வுமனப்பான்மை ஏற்படும் என்ற காரணத்தினால், அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்துக்கும் விலையில்லா பொருட்கள் என, பெயரிடப்பட்டு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.துணை சபாநாயகர் தனபால் பேசும்போது,''கிராமத்தில், வறுமை காரணமாக திருமணம் தள்ளிப்போகும் நிலை இருந்து வந்தது. தமிழக முதல்வரின் திருமண நிதி உதவி திட்டம் மற்றும் திருமாங்கல்யத்துக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் இனி அத்தகைய நிலை இருக்காது. திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டம் எந்த நாட்டிலும் செயல்படுத்தப்படவில்லை. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்கு, அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.விழாவை முன்னிட்டு, திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த, 103 பேருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம், 51.50 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தலா நான்கு கிராம் தங்கம் வீதம், 412 கிராம் தங்கம், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 படித்த, 147 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், 36.75 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.மேலும், டாம்கோ திட்டத்தின் கீழ் ஆறு மகளிர் குழுக்களை சேர்ந்த, 72 பேருக்கு, 19.50 லட்சம் ரூபாய் கடனுதவி தொகையும், கல்லூரியில் படிக்கும், 15 மாணவ, மாணவியருக்கு, 27.30 லட்சம் ரூபாய் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.