/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அன்னதான திட்டத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு
/
அன்னதான திட்டத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு
ADDED : செப் 12, 2011 03:45 AM
நாமக்கல்: ''விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்துக்காக, எட்டு கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி
கூறினார்.நாமக்கல் அடுத்த குமாரபாளையம் காளியம்மன் கோவிலில்,
விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம் துவக்க விழா நடந்தது.அத்திட்டத்தை
வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்து பேசியதாவது:தமிழக
முதல்வரால், கடந்த, 2002 மார்ச் 23ம் தேதி தமிழகம் முழுவதம், 361
கோவில்களில் அன்னதானம் திட்ட துவங்கப்பட்டது. தற்போது, இத்திட்டம் சிறப்பான
முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும், 106 கோவில்களில்
விரிவுப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இத்திட்டத்துக்கு
கூடுதலாக எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்
மாவட்டத்தில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கைலாசநாதர், நாமக்கல்
நரசிம்மர் ஸ்வாமி, காளிப்பட்டி கந்தசாமி, அத்தனூர் அம்மன், ராசிபுரம்
மாரியம்மன், செல்லாண்டியம்மன், மோகனூர் நவலடியான் ஆகிய கோவில்களில் அன்னதான
திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
விரிவுப்படுத்தப்பட்ட அன்னதான திட்டத்தின் கீழ், குமாரபாளையம்
காளியம்மன், மெட்டாலா ஆஞ்சநேயர் ஆகிய இரண்டு கோவில்களில் இத்திட்டம்
துவக்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக, கோவில்களில் உண்டியல்
வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இக்கோவில்களில், 15 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக
செலுத்தினால், அப்பணம் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக முதலீடு
செய்யப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டியில் நன்கொடையாளர் விரும்பும்
நாளில் ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து அன்றைய தினம் இத்திட்டத்தின் கீழ்
அன்னதானம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.இத்திட்டத்துக்காக வைக்கப்பட்ட உண்டியலில்,
வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, பணம் செலுத்தி சிறப்பு வழிபாட்டு
நிகழ்ச்சியில் பங்கேற்றார். குமாரபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் குமணன்,
அன்னதான திட்டத்துக்காக, 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சரிடம்
வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., கவிதா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர்
பாஸ்கரன், ஆய்வாளர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், அதிகாரிகள்,
பக்தர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.