/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு, ஆதரவு கோஷம் ராசிபுரத்தில் கலெக்டர் மனு வாங்கும் நிகழ்ச்சியில் 'பரபர'
/
பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு, ஆதரவு கோஷம் ராசிபுரத்தில் கலெக்டர் மனு வாங்கும் நிகழ்ச்சியில் 'பரபர'
பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு, ஆதரவு கோஷம் ராசிபுரத்தில் கலெக்டர் மனு வாங்கும் நிகழ்ச்சியில் 'பரபர'
பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு, ஆதரவு கோஷம் ராசிபுரத்தில் கலெக்டர் மனு வாங்கும் நிகழ்ச்சியில் 'பரபர'
ADDED : டிச 20, 2024 01:01 AM
ராசிபுரம், டிச. 20-
கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த அ.தி.மு.க.,-ம.தி.மு.க.,-பா.ஜ.,வினர், ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். ஆதரவு தெரிவித்து தி.மு.க., கவுன்சிலர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில் நேற்று முன்தினம் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரடியாக சோதனை நடத்தினார். ஒடுவன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம், நாமகிரிப்பேட்டை பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தார். இரவு வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, கூட்டுறவு, கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
இரவு, 10:00 மணியளவில், ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர் கேட் அரசு மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். சமையல் அறை, மாணவர் அறை ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளுக்கு கதவு, தாழ்ப்பாள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வார்டனை அழைத்து, மாணவர்கள் கூறிய பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி, உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.
முன்னதாக ராசிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டிருந்தார். அப்போது, அ.தி.மு.க., நகர செயலாளர் பாலசுப்ரமணியன், ம.தி.மு.க., ஜோதிபாசு, பா.ஜ., சேதுராமன் உள்ளிட்டோர் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை மாற்றக்கூடாது என கூறி கோஷமிட்டனர். அரசு புறம்போக்கு நிலம் இருக்கும் இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேசமயம், தி.மு.க, கவுன்சிலர் உள்ளிட்ட சிலர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என ஆதரவு குரல் எழுப்பினர். இருதரப்பும் கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.