/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8 தாலுகாவில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்
/
8 தாலுகாவில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்
ADDED : ஜன 20, 2024 07:19 AM
நாமக்கல் : 'மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகங்களில், இன்று ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல் மற்றும் மொபைல் எண் பதிவு போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொது வினியோக திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், அதன் செயல்பாடுகள் குறித்த புகார்களை பதிவு செய்யவும், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, தாலுகா அலுவலகங்களில், வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நடக்கிறது. இம்முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.