/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 11, 2025 07:06 AM
நாமக்கல்: அரசுத்துறை ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல்களை கண்டித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரத்தில், கடந்த, 6ல், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. அப்போது, தன்னுடைய கடமையைச் செய்த முதுநிலை ஆர்.ஐ., திருமாறன் என்பவரை, மாவட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். அவர் அளித்த புகார்படி, குமரேசனை போலீசார் கைது செய்தனர்.
கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து நிலை அலுவலர்களும், தங்களது கடமையை செய்யும்போது அதிகாரமும், அரசியல் பின்புலமும் கொண்டவர்களால் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியும், மன உளைச்சலும் நிலவுகிறது. பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிவதால் ஊழியர்களின் குடும்பத்தினரிடையே அச்சம், பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய்த்துறை ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற அத்துமீறல்களும், தாக்குதல்களும் நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.