ADDED : ஏப் 16, 2026 05:58 AM
குமாரபாளையம் : குமாரபாளையம் அருகே, தேர்தல் விதிகளை மீறி காரில் கொண்டு சென்ற, இரண்டு லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பரிசு பொருள், நன்கொடைகள் வழங்காமல் இருக்க, பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆனங்கூர், நெட்டவேலாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல், இரண்டு லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த சுதாகர் என்பவர், பணத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால், இரண்டு லட்சம் ரூபாய், குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
