/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சண்டி கருப்பசாமி கோவிலில் பிடிகாசு வழங்கும் விழா
/
சண்டி கருப்பசாமி கோவிலில் பிடிகாசு வழங்கும் விழா
ADDED : ஜூலை 25, 2025 01:31 AM
நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை அடுத்த சண்டி கருப்பசாமி கோவிலில், நேற்று பிடிகாசு வழங்கும் விழா நடந்தது.
நாமகிரிப்பேட்டை அடுத்த கொங்களம்மன் கோவில் அருகே பிரசித்தி பெற்ற, 30 அடி உயர சண்டி கருப்பசாமி, நாககன்னி கோவில்கள் உள்ளன. ஆடி அமாவாசையை ஒட்டி நடக்கும் சிறப்பு யாகத்தில், பக்தர்கள் காணிக்கையாக தரும் காசுகளை வைத்து பூஜை செய்வர். பூஜை செய்தபின் பிடிகாசு கேட்டு வரும் பக்தர்களுக்கு, பூசாரி யாக குண்டத்தில் இருந்து காசுகளை எடுத்து கொடுப்பார். அந்த காசை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இது வீட்டில் இருந்தால் திருமணம், குழந்தை பாக்கியம், வழக்குகளில் வெற்றி, உடல் ஆரோக்கியம், வியாபாரம் உள்ளிட்டவை சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. அடுத்த ஆண்டு, தங்களது பிரார்த்தனை நிறைவறினால், பக்தர்கள் காணிக்கையாக யாகத்திற்கு காசு தருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான பிடி காசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு மறு பூஜை, 12:00 மணிக்கு சண்டி கருப்ப சாமிக்கு படையல் பூஜை நடந்தது. அதை தொடர்ந்து சண்டி கருப்பசாமி பூசாரி ராஜேந்திரன், பக்தர்களுக்கு பிடி காசுகளை வழங்கினார்.