ADDED : டிச 14, 2024 02:28 AM
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உற்பத்தியாகும் சுவேத நதி, சேலம் மாவட்டம் வழியே செல்கிறது. தொடர் மழையால் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, 15வது வார்டு, தெற்கு காட்டில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், சுவேத நதியை கடந்து கெங்கவல்லி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பரில் சுவேத நதி குறுக்கே, நான்கு லட்சம் ரூபாயில், மக்களே சிமென்ட் உருளையுடன், தற்காலிக தரைப்பாலம் அமைத்து ஆற்றை கடந்து சென்று வந்தனர். தற்போது தொடர் மழையால் சுவேத நதியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மக்கள் அமைத்திருந்த தரைப்பாலம் அடித்துச்சென்றது. இதனால் தெற்கு காட்டில் இருந்து கெங்கவல்லிக்கு செல்லும் மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவியர், 10 கி.மீ.,ல் உள்ள வலசகல்பட்டி மேம்பாலம் வழியே சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.