/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
/
கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ADDED : ஜூன் 19, 2025 02:00 AM
நாமக்கல், ஜூன் 19
கொல்லிமலை மாசிலா அருவி, நம்ம அருவியில் கொட்டும் மூலிகை கலந்த தண்ணீரில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து குதுாகலித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்கும் கொல்லிமலையில், அபூர்வ மூலிகை செடிகள் நிறைந்துள்ளன. இங்கு, 18 சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சான்றாக, ஏராளமான குகைகள் இங்கு அமைந்துள்ளன. கொல்லிமலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட நாடாகவும் திகழ்கிறது. இங்கு, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி உள்ளிட்ட அருவிகளும், அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன.
பல்வேறு சிறப்புகளை கொண்ட கொல்லிமலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. வழக்கமாக விடுமுறை நாட்களில் மட்டுமே அதிகளவில் சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம்.
ஆனால், வேலைநாளான நேற்றும், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு சென்றனர். அவர்கள், மாசிலா அருவியில் குளித்து குதுாகலம் அடைந்தனர். அதேபோல், நம்ம அருவியிலும், சுற்றுலா
பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.