/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
/
விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி
ADDED : டிச 31, 2024 07:27 AM
நாமக்கல்: 'விமான நிலையத்தில் பணிபுரிய, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலமாக, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்பு மற்றும் விமான பயண முன்பதிவு போன்றவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 முதல், 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஆறுமாதமும், விடுதியில் தங்கிபடிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான, 95,000 ரூபாய் தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தனியார் விமான நிறுவனங்களிலும், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக, 20,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் வரை கிடைக்கும். திறமைக்கேற்ப பதவி உயர்வு பெறும்போது ஊதியம், 70,000 ரூபாய் வரை உயரும்.
இத்திட்டத்தில், 55 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு முதற்கட்டமாக, 46 பேர் முன்னணி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தாட்கோவில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என, அவர் தெரிவித்துள்ளார்.