/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரையை கடந்தது 'மோந்தா' ஆந்திராவில் இருவர் பலி
/
கரையை கடந்தது 'மோந்தா' ஆந்திராவில் இருவர் பலி
ADDED : அக் 30, 2025 01:42 AM
அமராவதி, வங்கக்கடலில் உருவான, மோந்தா புயல், சென்னைக்கு தென்கிழக்கே, 420 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. மணிக்கு, 17 கி.மீ., வேகத்தில் நகர்ந்த இந்த புயல் ஆந்திர கடல்பகுதியில் காக்கிநாடா அருகே மசூலிபட்டினம் கலிங்கபட்டினம் இடையே நேற்று அதிகாலை, 1:00 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது, 110 கி.மீ., வேகத்தில் சூறைகாற்று வீசியது.
இதனால் கோதாவரி, காக்கிநாடா, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் காரணமாக ஆந்திராவில், 22 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.
முன்னெச்சரிக்கையாக, 76,000 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். புயலையொட்டி நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றால் கோனசீமா மாவட்டத்தின் மகனகுடேம் கிராமத்தில் பனைமரம் விழுந்து 43 வயது பெண்ணும், மின்கம்பம் விழுந்து மற்றொருவர் என இருவர் உயிரிழந்தனர். புயல் காரணமாக ஆந்திராவில், 1.76 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இது மட்டுமின்றி தெலுங்கானாவின் ஹைதராபாத், ஒடிஷாவில், 15 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன. ஒடிஷாவில் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 10.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பாலசூரில், 9.35 செ.மீ., மழையும், குர்தாவில், 9 செ.மீ., மழையும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

