/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'இரவு வான் பூங்கா' அமைக்கும் பணி சுறுசுறு
/
'இரவு வான் பூங்கா' அமைக்கும் பணி சுறுசுறு
ADDED : ஆக 31, 2025 04:15 AM
சேந்தமங்கலம்:கொல்லிமலை
சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
கடல் மட்டத்தில் இருந்து,
1,300 மீ., உயரம் கொண்ட இம்மலையின் உச்சிக்கு செல்ல, 70 கொண்டை ஊசி
வளைவுகளை கடக்க வேண்டும். இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி,
மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அறப்பளீஸ்வரர் கோவில்,
வியூ பாயின்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் இடங்களாக
அமைந்துள்ளன. தமிழக அரசு, கொல்லிமலையில் ஒரு கோடி ரூபாய்
மதிப்பீட்டில், 'இரவு வான் பூங்கா' அமைக்கப்படும் என,
அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக, 44 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்தது.
கொல்லிமலையில், 'இரவு வான் பூங்கா' அமைக்க
சென்னை குழுவினர் ஆய்வு செய்து அரியூர் நாடு, சோலை காப்பு காடு பகுதியை
தேர்வு செய்திருந்தனர். இந்த பூங்காவில் மிகவும் துல்லியமாக
பார்க்கக்கூடிய டெலஸ்கோப் அரங்கம் அமைக்கும் பணி தற்போது நடந்து
வருகிறது. இந்த டெலஸ்கோப்பில் இருந்து நட்சத்திரங்களை மிக அருகில்
இருப்பதுபோல் பார்க்க முடியும்.
மேலும், இரவுநேர விலங்குகளுக்கு
இணக்கமான ஒரு பூங்காவாக இது இருக்கும். மின் விளக்குகளின்
பயன்பாட்டை குறைத்து, இரவு வானத்தில் நட்சத்திரங்களை பார்ப்பதை இது
அதிகரிக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

