ADDED : ஏப் 25, 2026 06:05 AM
நாமக்கல், நாமக்கல்-சேலம் சாலையில் முருகன் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. மேலும், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள இடமாக இருப்பதால் இரவு, பகல் என எப்போதும் மக்கள் கூட்டம், வாகன போக்குவரத்தும் அதிகமாகவே காணப்படும்.
இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து முருகன் கோவில் பஸ் ஸ்டாப்பிற்கு வரும் வழியில் உயர் அழுத்த மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதன் அருகே, மின் கம்பங்கள் நடப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அதன் அடிபாகம் முற்றிலும் உடைந்து கம்பிகள் மட்டுமே தெரிகின்றன.
இதுகுறித்து, அப்பகுதியினர் மின்வாரியத்திடம் புகாரளித்துள்ளனர். ஆனால், நேற்று மாலை வரை அதை சீரமைக்கவில்லை. அதனால், அந்த கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பெரும் விபத்து நடக்கும் முன், உடைந்துள்ள மின் கம்பத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
