/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா
/
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா
ADDED : ஜூலை 25, 2011 10:58 PM
குன்னூர் : குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் காட்டு யானைகள் உலா வருகின்றன; அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்துள்ளன. இங்கு, தற்போது வனம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பலாப்பழ மரங்களில் சீசன் களைகட்டியுள்ளது. கடந்த இரு நாளாக இரண்டு பெரிய யானை, ஒரு குட்டி உட்பட யானை கூட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்து கொண்டிருக்கிறது. சாலையின் இடையே காட்டேரி பூங்காவை ஒட்டியுள்ள சாலையில் உலா வந்த யானைகளை, பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்தனர். யானைகளால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவிட்டாலும், இரவில், சாலையில் வரும் வாகனங்களை யானைகள் வழிமறிக்கின்றன. அடர்ந்த வனத்தில் வசிக்கும் யானைகள் அவ்வப்போது திசை மாறி சாலைக்கு வருவதற்கு, வனத்தின் இடையே உள்ள பட்டா நில உரிமையாளர்கள், தங்கள் நிலத்தை சுற்றி மின் மற்றும் முள் வேலி அமைப்பது தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 'யானைகள் பாதுகாக்கப்பட வேண்டும்' என குரல் கொடுத்து வரும் அமைப்புகளும், வனத்துறையும், யானைகள், சாலைக்கு வருவதற்கான காரணத்தை விரிவாக ஆராய்ந்து, அதற்கேற்ற மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும். குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் கூறுகையில், '' தற்போது காட்டேரி பகுதியில் சுற்றி கொண்டிருக்கும் மூன்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

