/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளம் பெண் மர்மச்சாவில் மாமியார் உட்பட 3 பேர் கைது
/
இளம் பெண் மர்மச்சாவில் மாமியார் உட்பட 3 பேர் கைது
ADDED : செப் 01, 2024 02:01 AM

ஊட்டி;நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா, 50, ஆட்டோ டிரைவர், இவருடைய மனைவி யாஸ்பின், 47, இவர்களுக்கு இம்ரான், 27, முக்தார் , 24, என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இம்ரான், ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது-, நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன், 23, என்பவரை காதலித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 2 வயதில் குழந்தை உள்ளது. மாமியார் யாஸ்பினுக்கும்- மருமகள் ஆஷிகா பர்வீனுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூன் 23-ம் தேதி ஆஷிகா பர்வீன், கணவர் வீட்டில் இறந்து கிடந்தார். ஊட்டி ஜி-1 போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் காபியில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
நேற்று, ஆஷிகா பர்வீனின் தந்தை அப்துல் சமது-, அம்மா நிலாபர் நிஷா மற்றும் உறவினர்கள், சம்மந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி , ஊட்டி ஜி 1 போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன், டவுன் டி.எஸ்.பி., யசோதா ஆகியோர் இளம் பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின், உறவினர்கள் கலைந்து சென்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
யாஸ்பின் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக ஆஷிகா பர்வீனிடம், 20 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியுள்ளனர். அவரால் பணம் கொடுக்க முடியவில்லை.
ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் நகைக்கு பாலீஸ் போடும் சயனைடு விஷத்தை வாங்கி காபியில் கலந்து ஆஷிகா பர்வீனுக்கு கொடுத்து உள்ளனர். இதைக் குடித்து அவர் இறந்துள்ளார்.
பூனேவுக்கு அனுப்பப்பட்ட உடற்பாகங்கள் ஆய்வில் சயனைடு கலந்திருப்பது உறுதியாகியுள்ளது. இச்சம்பவத்தில், மாமியார் யாஸ்பின், கணவர் இம்ரான், கணவரின் தம்பி முக்தார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்' என்றனர்.