/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விசர்ஜனத்திற்கு 518 சிலைகள்! நகர் எங்கும் வைக்கப்பட்டு நாள்தோறும் வழிபாடு
/
விசர்ஜனத்திற்கு 518 சிலைகள்! நகர் எங்கும் வைக்கப்பட்டு நாள்தோறும் வழிபாடு
விசர்ஜனத்திற்கு 518 சிலைகள்! நகர் எங்கும் வைக்கப்பட்டு நாள்தோறும் வழிபாடு
விசர்ஜனத்திற்கு 518 சிலைகள்! நகர் எங்கும் வைக்கப்பட்டு நாள்தோறும் வழிபாடு
ADDED : செப் 09, 2024 09:53 AM
ஊட்டி: நீலகிரியில், 518 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.
நீலகிரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், மஞ்சூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில், ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், ஒன்றரை அடி முதல் ஒன்பது அடி உயரம் வரை உள்ள சிலைகள் மற்றும் வீடுகளுக்கு வழங்கியுள்ள, ஒன்றரை அடி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.
விசர்ஜன ஊர்வலம்
அதில், ஹிந்து முன்னணி சார்பில், ஊட்டி ஐந்துலாந்தர், பாம்பே கேசில் பகுதியில், 10 அடி உயர விநாயகர் சிலை, அனுமன் சேனா சார்பில் காந்தள் பகுதியில், 10 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும், 518 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் பூஜைகள் செய்யப்படுகிறது.
நேற்று, சிவசேனா அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், மாவட்ட தலைவர் ரெக்ஸ் மணி, மாநில துணைதலைவர் உதயகுமார் முன்னிலையில் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
அதில், மேள தாளம் முழங்க காந்தளில் துவங்கிய ஊர்வலம் பென்னட் மார்க்கெட், ஹில்பங்க், லாலி இன்ஸ்டிடியூட், கமர்சியல் சாலை வழியாக பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. பின், சிலைகள் காமராஜர் சாகர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
பந்தலுார் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட, 55 விநாயகர் சிலைகள் ரிச்மவுண்ட் மாரியம்மன் கோவில் வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து, போலீசார் பாதுகாப்புடன், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் பந்தலுார் பஜார், மேங்கோரேஞ்ச், தொண்டிபாளயம், உப்பட்டி வழியாக சென்று பொன்னானி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
மசினகுடி பகுதியில், இந்து முன்னணி சார்பில், 7 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் மசினகுடி விநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, விசர்ஜன ஊர்வலம் துவங்கியது.
மசினகுடி - ஊட்டி சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக மரவக்கண்டி அணை பகுதிக்கு சென்று, சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் போலீசார் வழங்கப்பட்ட தேதிகளில் அந்தந்த பகுதியில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.
எஸ்.பி., நிஷா கூறுகையில், '' விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அந்தந்த அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.
ஊர்வலத்தை ஒட்டி மாவட்டம் முழுவதும், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,''என்றார்.