/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி சாலையில் வாகனம் மோதி மான் இறப்பு
/
ஊட்டி சாலையில் வாகனம் மோதி மான் இறப்பு
ADDED : ஜூன் 26, 2024 10:01 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் ஒன்று இறந்தது.
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள், உள்ளூர் வாசிகள் என தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
இதனிடையே நேற்று முன் தினம் அதிகாலை புள்ளி மான் ஒன்று மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் ஓடந்துறைக்குட்பட்ட பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மான் சம்பவ இடத்திலேயே பலியானது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, அடர் வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் ஒன்று உயிரிழந்தது.
இச்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் வேகமாக செல்லக்கூடாது. மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.--