ADDED : ஏப் 16, 2024 12:10 AM

குன்னுார்:குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூ குண்டம் திருவிழா, நடந்தது. கோவிலில் அம்மன் ஊர்வலம் துவங்கி, இரவு, 7:00 மணிக்கு வி.பி., தெரு மார்க்கெட் பூ குண்டத்தை அடைந்தது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபரவசத்துடன் பூகுண்டம் இறங்கினர்.
பலரும் கை குழந்தையுடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் சாட்டையால் தங்களை அடித்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஏற்பாடுகளை, அனைத்து மத இளைஞர் மன்றம், லாரி உரிமையாளர்கள் தொழிலாளர்கள் சங்கம், அண்ணா பாரம் துாக்கும் தொழிலாளர்கள் சங்கம், விவேகானந்தர் நற்பணி மன்றம், தாசப் பளஞ்சிக இளைஞர் சங்கம் மற்றும் கோவில் நிர்வாகம் குழுவினர் செய்திருந்தனர். இன்று தேர் ஊர்வலம் நடக்கிறது.
தேர்தல் காரணமாக, 19ம் தேதி நடக்க வேண்டிய முத்துப்பல்லக்கு மே, 3ம் தேதி நடக்கிறது.

