/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழுதடைந்து நிற்கும் பஸ்களால்... தாமதமாகும் பயணம்!உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி
/
பழுதடைந்து நிற்கும் பஸ்களால்... தாமதமாகும் பயணம்!உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி
பழுதடைந்து நிற்கும் பஸ்களால்... தாமதமாகும் பயணம்!உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி
பழுதடைந்து நிற்கும் பஸ்களால்... தாமதமாகும் பயணம்!உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி
ADDED : மே 22, 2024 12:21 AM

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நிற்பதால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் பெரும்பாலான மக்கள் பஸ்களில் மட்டுமே பயணம் செய்கின்றனர். மாவட்ட போக்குவரத்து கழக நிர்வாகத்தின் கீழ், 349 பஸ்கள் இயங்கி வருகின்றன. அதில், பெரும்பாலான அரசு பஸ்கள் பராமரிப்பு முழுமையாக இல்லாமல் அடிக்கடி பழுதடைந்து ஆங்காங்கே நிற்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
பழுதடைந்து நின்ற பஸ்
இந்நிலையில், நேற்று கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த அரசு பஸ் அருவங்காடு அருகே காலை, 9:45 மணி அளவில் பழுதடைந்து நின்றது.
பயணிகள் இறக்கி விடப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் மாற்று அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால், குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு பணிக்கு செல்வோர் பலரும் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். ஊட்டி- குன்னுார் இடையே, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகங்கள் கூறி வந்த நிலையில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்குவது அவ்வப்போது தொடர்கிறது.
மழைகாலத்தில் பாதிப்பு
இதனால், காத்திருக்கும் உள்ளூர் மக்கள், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் செலுத்தி கூட்ட நெரிசலில், நின்று கொண்டே பயணம் செய்கின்றனர். அதன் பிறகு, 2 அல்லது 3 உள்ளூர் மகளிர், 'விடியல்' பயண பஸ்கள் வரிசையாக இயக்கப்படுவதால், பெரும்பாலும் ஊட்டி- குன்னுார் இடையே ஓடும் சில அரசு பஸ்கள் காலியாக செல்கிறது. மறுபுறம், அதில் பெரும்பாலான அரசு பஸ்கள் கூரைகள் சேதமடைந்து, மழை காலத்தில் ஒழுகுவதால் நனைந்தவாறு பயணிகள் பயணம் செய்வதும் தொடர்கிறது.
பயணிகள் கூறுகையில், 'மலை மாவட்டத்தில், பழுதடைந்த அரசு பஸ்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். உள்ளூர் பஸ்களை குறிப்பிட்ட நேரங்களில் இயக்கி பயணிகள் தாமதமின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

