ADDED : ஜூன் 03, 2026 01:10 PM
பந்தலுார்: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில், கூடலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் செயல்படும், கூடு அறக்கட்டளை 21 ஆம் ஆண்டு விழா மற்றும் கூடு மாணவர்கள் மேம்பாட்டு மைய, மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, எருமாடு தனியார் மண்டபத்தில் நடந்தது.
மையத்தின் ஆசிரியர் கஸ்தூரி வரவேற்றார். வயநாடு பகுதியைச் சேர்ந்த பழங்குடியின திருநங்கை பிரகிருதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அறக்கட்டளை இயக்குனர் சன்னி தலைமை வகித்து பேசுகையில், கூடலூர் கல்வி மாவட்டம் அதிக அளவில் கிராமப் பகுதிகள், பழங்குடியின கிராமங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
இந்தப் பகுதி மாணவர்கள் பள்ளி துவக்க நாளில், புதிய தளவாடப் பொருட்களை வாங்கி செல்வதில் சிரமம் உள்ளது. இதனை தீர்க்கும் வகையில் பெங்களூஸரைச் சேர்ந்த ரோட்டரி கிளப் சார்பில் 400 மாணவர்களுக்கு, கல்வி உதவி பொருட்கள் வழங்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து நயன ஜோதி டிரஸ்ட் நிர்வாகி ஜெயராமன், ரோட்டரி கிளப் நிர்வாகி பிரசன்னகுமாரி, ஜோசப், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், தூய்மை பணியாளர்கள், சிறந்த ஆசிரியர்கள், சமூக சேவகர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கூடலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
