/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆக்கிரமிப்புகள்
/
போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆக்கிரமிப்புகள்
ADDED : மே 01, 2024 11:19 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாலையின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று வருகின்றனர். வழக்கமாகச் செல்லும் வாகனங்களை விட, இந்த சீசனுக்கு இரண்டு மடங்கு வாகனங்கள் ஊட்டிக்கு செல்கின்றன.
இதனால் காலை நேரத்தில், மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோன்று சுற்றுலா சென்றவர்கள், மாலையில் திரும்பி வரும்போது, மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலால், உள்ளூர் வாகனங்கள் அங்கும் இங்கும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன.
மேலும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், உள்ளூரில் உள்ள பொதுமக்கள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு, இரண்டு காரணங்கள். ஒன்று அதிக அளவில் வாகனங்கள் வருவது. மற்றொரு காரணம். நகரில் சாலையின் இரு பக்கம் ஆக்கிரமிப்பு செய்து, பலர் கடைகளை வைத்துள்ளனர். இந்த கடைகளில் பொருட்களை வாங்க வரும் நபர்கள், தங்கள் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கின்றனர். இதனாலும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் ஒரு வழி பாதையாக அறிவித்துள்ள அண்ணாஜி ராவ் சாலை வழியாக, நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களும், சத்தியமங்கலம், சிறுமுகை வழியாக வரும் வாகனங்களும் வருகின்றன. ஆனால் இந்த சாலையின் இரு பக்கம், வியாபாரிகள், பொருட்களை சாலை வரை வெளியே வைத்துள்ளனர்.
இதனால் இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் உள்ள இந்த சாலை, ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவில் உள்ளது. எதிரே வாகனம் வருவதற்கு வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், சாலையின் இரு பக்கம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக, இரண்டு மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போர்க்கால அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை துறையும், மாநில நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும் மற்றும் போலீசும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில் வழக்கமான வார நாட்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் ஊட்டிக்கு சென்று வருகின்றன.
இ-பாஸ் முறை குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் ஏதும் குறிப்பிடவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

