ADDED : பிப் 25, 2025 10:00 PM

கோத்தகிரி; தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில், தேசிய பசுமை படை மற்றும் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு, ஊட்டி மரவியல் பூங்காவில் இயற்கை கல்வி களப்பயிற்சி நடந்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகி பூஜா தலைமை வகித்து பேசுகையில், ''நீலகிரி மாவட்ட இயற்கை பாதுகாப்புக்கு மாணவர்களின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது போன்ற கல்வி களப்பயிற்சி எதிர் காலத்தில் சிறப்பான மாணவர்களை உருவாக்க சிறந்த வாய்ப்பாக உள்ளது,'' என்றார்.
பள்ளி ஆசிரியர் சகாதேவி பேசுகையில், ''பள்ளியில் படிக்கும் பாடங்களை நேரில் மாணவர்களுக்கு செயல்முறையில் கிடைத்திருப்பது அவர்களின் கற்கும் திறன் மேம்படுவதற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது,''என்றார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் மாணவர்களுக்கு, 'ஈர நிலங்களில் வளரும் தாவரங்கள் அவற்றின் பயன்கள், பல்வேறு பறவைகள், மரங்கள், மரப்பட்டைகள் இலைகள், பூ மரங்களின் வகைகள், பட்டாம்பூச்சிகள், பல்லுயிர் தன்மையின் சங்கிலி தொடர்பு,' குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில், ஆரோக்கியமான சிறு தானிய உணவுகள் மற்றும் காய்கறிகளின் சத்துக்கள் அடங்கிய கையேடு மற்றும் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர் ஜெயக்குமார் உட்பட, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய பசுமை படை செய்திருந்தது.
