ADDED : ஏப் 28, 2026 08:11 PM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வனத்தீ பரவி வருவதால், மின் உற்பத்தி நிலைகளில் கண்காணிப்பு தீவிரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், சிங்காரா, மாயார், காட்டு குப்பை, அவலாஞ்சி உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள், 13 அணைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, நீலகிரி, கூடலுார் வனக்கோட்டங்களில் காட்டு தீ பரவல் காரணமாக, 1000 ஏக்கர் வனப்பரப்பு எரிந்து சாம்பலானது. காட்டு தீயால் வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டது.
தீயை அணைக்க வனத்துறை போராடி வருகிறது. வனப்பகுதிக்கு இடையே அணை, மின்நிலையங்கள் செயல்படுவதால் காட்டு தீயால் பாதிப்பு நேரிடும் அபாயம் இருப்பதால் மின்வாரியம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று மாநில அரசு அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள்; அணை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,‘ மாநில மின்வாரிய தலைமை உத்தரவுப்படி, குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அணை, மின் நிலையங்களை பாதுகாத்து கொள்ள கோடை காலம் முடியும் வரை, அந்தந்த மின் வட்ட செயற் பொறியாளர்கள் தலைமையில், குறிப்பாக, மின்நிலையம் செயல்படும் பகுதிகளில், 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட அரசு அறிவுறுத்தி உள்ளது. கண்காணிப்பு ஊழியர்கள், உள்ளூர் மக்கள் வனத்தீ தொடர்பான தகவல்களை வனத்துறை; மின்வாரிய அலுவலங்களில் தெரிவித்து உதவ வேண்டும். அதேபோல, வனப்பகுதிக்கு தீ வைக்கும் சமூக விரோதிகள் கண்டறியப்பட்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
