/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடும் வறட்சியால் பல்வேறு இடங்களில் வனத்தீ
/
கடும் வறட்சியால் பல்வேறு இடங்களில் வனத்தீ
ADDED : ஏப் 08, 2024 12:20 AM

கூடலுார்:கடும் வறட்சியின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வனத்தீ பரவியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம்; ஊட்டி மற்றும் மசினகுடி வன கோட்டங்களில், நடப்பாண்டு கோடைமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால், வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனத்தீ ஆங்காங்கே பரவி வருகிறது.
இந்நிலையில், மசினகுடி கோட்டம் சீகூர் வனத்தை ஒட்டிய பகுதியில் இரு நாட்களாக வனத்தீ பரவி, நேற்று முன்தினம் நள்ளிரவில் மசினகுடி சீகூர் வனப்பகுதிக்குள் பரவியது.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவுபடி, வனச்சரகர் தயானந்தன் தலைமையில், சீகூர், சிங்கார, மசினகுடி வனச்சரகங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று, காலை தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். வனத்தீயில் 'லெமன் கிராஸ்' எனப்படும் புற்கள் எரிந்து சாம்பலாகின.
l குன்னுாரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, நேற்று மதியம் பழைய அருவங்காடு அருகே ரயில் பாதை பகுதியில், வனத்தீ ஏற்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே ஊழியர்கள், அரவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த பகுதிகளில் கடும் புகை சூழ்ந்ததால் ரயிலில் சென்ற சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
l பந்தலுார் பெருங்கரை என்ற இடத்தில் தனியார் எஸ்டேட்டிற்கு சொந்தமான சதுப்பு நிலப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன் தினம் இரவு சமூக விரோதிகள் தீ வைத்துள்ளனர். தீ பரவியதில் அப்பகுதி புதர்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதனால், பறவைகள் மற்றும் முயல், சருகுமான் உள்ளிட்ட சிறு வகை வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

