/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உழவர் சந்தையில்குப்பை அகற்றும் பிரச்னை
/
உழவர் சந்தையில்குப்பை அகற்றும் பிரச்னை
ADDED : ஆக 27, 2024 01:47 AM
கூடலுார்;கூடலுார் உழவர் சந்தையில் குப்பை அகற்றுவது தொடர்பான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, உழவர் சந்தை வளாகத்தில் உள்ள குப்பையை, நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நேரடியாக சேகரித்து சென்றனர்.
சமீபத்தில் உழவர் சந்தை வளாகத்தில் குப்பை வண்டியில் இருந்து, குப்பைகளை இறக்கி ஏற்றினர். 'இது போன்ற பணிகளில் ஈடுபட கூடாது' என, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனால், குப்பை வண்டி ஓட்டுநர்கள், உழவர் சந்தைக்குள் சென்று குப்பையை எடுத்து செல்ல மறுத்து வந்தனர். இது தொடர்பாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், உழவர் சந்தையில் பார்வையிட்டு, நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். நகராட்சி கமிஷனர் முனியப்பன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரன் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, உழவர் சந்தைக்குள் இருந்த குப்பைகளை அகற்ற, குப்பை வண்டி ஓட்டுனருக்கு உத்தரவிட்டனர். இதனை ஏற்க மறுத்த, குப்பை வண்டியின் ஒப்பந்த ஓட்டுனர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், குப்பையை எடுக்காமல் திரும்பி சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிரந்தர ஊழியர்கள் மூலம் குப்பை அகற்றப்பட்டது. இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுவதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உழவர் சந்தை வியாபாரிகள்; உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.