ADDED : ஆக 28, 2024 02:02 AM

சூலுார்:பங்களாதேஷ் நாட்டில் ஹிந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, சூலுாரில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பங்களாதேஷ் நாட்டில், பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், அங்கு ஹிந்து கோவில்கள் சேதப்படுத் தப்பட்டன. ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரப்பட்டது.
போலீசார் அனுமதி மறுத்ததால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெற்றனர்.
இதையடுத்து, சூலுார் சீரணி கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் பேசுகையில், பங்களாதேஷ் நாட்டில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை, மத்திய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும். அங்கு, ஹிந்துக்கள், ஹிந்து கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதில் தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணவேண்டும், என்றார்.
சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரவிக்குமார், அசோக், நந்தகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பங்களாதேஷ் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.