/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலைகளில் கால்நடைகள் உலா வாகனங்கள் செல்ல இடையூறு
/
சாலைகளில் கால்நடைகள் உலா வாகனங்கள் செல்ல இடையூறு
ADDED : பிப் 25, 2025 10:11 PM

ஊட்டி,; ஊட்டி சாலைகளில் கால்நடைகள் தொடர்ந்து உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா நகரமான ஊட்டியில், வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து, வாகனங்களில் வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனை தவிர்க்க, போலீசார் தொடர்ந்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
குறிப்பாக, ஐந்துலாந்தர், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார் மற்றும் அப்பர் பஜார் சாலைகளில், கால்நடைகள் கூட்டமாக வருவது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில், அவை சாலையில் படுத்து விடுவதால், வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்படுகிறது.
ஊட்டி நகராட்சி நிர்வாகம், கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. தற்போது, அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, வாகனங்கள் அதிகரித்து வரும் ஊட்டி சாலைகளில், கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுப்பது அவசியம்.