/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
/
மஞ்சூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
ADDED : மே 03, 2024 11:25 PM

ஊட்டி;மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மஞ்சூரில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை மஞ்சூரில் விநாயகர் கோவிலில் இருந்து, 108 குடங்களில் புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து விநாயகர் பூஜையுடன் வாஸ்து சாந்தி, முதற்கால யாக வேள்வி, ஹோமம் ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை விநாயகர் பூஜை, புண்யாகம், யாகசாலை, கலச பூஜை, இரண்டாம் கால வேள்வி விஷேச ஹோமங்களுடன் வேத, மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
இதேபோல, மாரியம்மன், கணபதி, முருகன் மற்றும் நவக்கிரக பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
மஞ்சூர், மஞ்சூர்ஹட்டி, மணிக்கல், கண்டிபிக்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.