/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுமைக்கு மாறிய முதுமலை: நிரம்பிய நீர் நிலைகள்
/
பசுமைக்கு மாறிய முதுமலை: நிரம்பிய நீர் நிலைகள்
ADDED : மே 28, 2024 11:45 PM

கூடலுார்;முதுமலையில் தொடரும் மழையால் வனப்பகுதி பசுமைக்கு மாறியதுடன், நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில், கடந்த மாதம் வரை கோடை மழை ஏமாற்றியதால் வனப்பகுதி பசுமை இழந்தும்; நீர்நிலைகள் நீர்வரத்து இன்றி வறண்ட நிலைக்கும் மாறியது. வனத்தீயில், பல ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி பாதிக்கப்பட்டது. இதனால், வனவிலங்குகளுக்கு உணவு; குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
வறட்சியான வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வன ஊழியர்கள் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று தொட்டிகளில் ஊற்றி வந்தனர். கோடை மழை தொடர்ந்து ஏமாற்றியதால், வனவிலங்குகளின் குடிநீர்; உணவு தேவை வனப்பகுதியில் முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
யானை போன்ற தாவர உண்ணிகள் உணவு, குடிநீர் தேடி இடம்பெயர்ந்தன. இந்த பிரச்னைக்கு தீர்வாக கோடை மழையை எதிர்பார்த்து வனத்துறையினர் காத்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. முதுமலை வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது.
நீர் குட்டைகள்; சிறிய தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. நீரோடை ஆறுகள் தடுப்பணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடும், வனத் தீ அபாயமும் நீங்கியுள்ளது. வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால், நடப்பு ஆண்டு பல மாதங்களாக கடும் வறட்சி நிலவியது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாட்டுக்கு சிரமம் ஏற்பட்டது. வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி இடம்பெயர்ந்து, கேரளா, கர்நாடக வனப்பகுதிக்கு சென்றன. தற்போது, பெய்து வரும் கோடை மழையால், வனப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. வனவிலங்குகளின் உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது. கோடையில், உணவு தேடி இடம்பெயர்ந்த யானைகள் உள்ளிட்ட விலங்குகள் முதுமலை நோக்கி வர துவங்கியுள்ளன,'என்றனர்.